பணத்துடன் தப்பியோடிய தூய்மைப் பணியாளர் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றுபவர் முருகன் (57). இந்த அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக மாயப்பெருமாள் (50) பணியாற்றி வருகிறார். இவர், ஆய்வாளா் முருகனுக்கு உதவியாளர் போலவும் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர், தொழிலாளார் நல ஆய்வாளர் தன்னிடம் லஞ்சம் கேட்பதாக, விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் மருத்துவரிடம் ரசாயனம் தடவிய ரூ. 10 ஆயிரத்தை கொடுத்தனுப்பினர். இந்தப் பணத்தை மருத்துவர், தூய்மைப் பணியாளர் மாயப்பெருமாளிடம் கடந்த 28-ஆம் தேதி வழங்கினார்.
அப்போது, அந்த அலுவலகத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாள் ராஜேந்திரன், ஆய்வாளர் பூமிநாதன் தலைமையிலான அதிகாரிகள், ஆய்வாளர் முருகனிடம் விசாரணை மேற்கொண்டனர். தூய்மைப் பணியாளர் மாயப்பெருமாள் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனிடையே, போலீசார் மாயப்பெருமாளை தேடி வந்த நிலையில், அவரை கைது செய்து பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
Tags :