குமரி மாவட்டத்தில் 1, 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

by Editor / 25-01-2023 08:56:17am
குமரி மாவட்டத்தில் 1, 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

குமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 1, 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை நடக்கிறது. நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. 

குடியரசு தின விழாவையொட்டி ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் 1, 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். கடலோர பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடலில் ஏதேனும் மர்மப் படகு தென்பட்டால் உடனே தகவல் தெரிவிக்கும்படி மீன்பிடிக்க செல்லும் மீனவர்களிடம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. அங்கு மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாகவும், மோப்ப நாய் மூலமாகவும் பார்சல்கள் மற்றும் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் போலீசார் சோதனை செய்கிறார்கள். இதுபோல் கன்னியாகுமரி, குழித்துறை உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் மற்றும் களியக்காவிளை உள்ளிட்ட சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via