நிக்கி யாதவ் கொலை வழக்கு – வெளியான திடுக்கிடும் தகவல்கள்
நாட்டையே உலுக்கிய இளம் பெண் ஷ்ரத்தா கொலை வழக்கை தொடர்ந்து, லிவிங் டுகெதர் பாணியில் வாழ்வோருக்கிடையே பிரச்னை ஏற்பட்டு, அந்த பிரச்னை கொலையில் முடிவது வாடிக்கையாகி வருகிறது. டெல்லியில் லிவ்-இன் பார்ட்னரான இளம் பெண் நிக்கி யாதவை கொலை செய்து, அவரது உடலை தான் நடத்தி வந்த உணவகத்தின் ஃபிரிட்ஜில் பதுக்கிய சாஹில் கெல்லட், பிப்ரவரி 14 ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
டெல்லியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிவிங் டுகெதர் பாணியில் வாழ்ந்தபோது நிக்கி யாதவை யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக போலீசார் விசாரணையில் சாஹில் தெரிவித்தார். ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், தனது வீட்டார் வேறொரு பெண்ணை தனக்கு நிச்சயம் செய்ததாகவும், அந்த பெண்ணுடன் திருமணம் முடிவானதாகவும் சாஹில் விசாரணையில் தெரிவித்தார். திருமணம் முடிவானதை அறிந்த நிக்கி யாதவ் தன்னுடன் சண்டையிட்டு பிரச்னையில் ஈடுபட்டதால் அவரை தீர்த்துக்கட்ட தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைந்து திட்டம் தீட்டியதாக பகீர் வாக்குமூலம் அளித்தார் சாஹில்.
அதன்படி தந்தை வீரேந்தர், உறவினர்களான ஆஷிஷ், நவீன் மற்றும் இரு நண்பர்களுடன் சேர்ந்து பிப்ரவரி 10 ஆம் தேதி கொலை செய்து பிரிட்ஜில் பதுக்கி வைத்ததாகவும் சாஹில் தெரிவித்தார். அதன் பின்னர் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் அவசர அவசரமாக திருமணம் செய்துகொண்டதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். சாஹில் கெல்லட் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலை செய்யவும், குற்றத்தை மறைக்கவும் உடந்தையாக செயல்பட்ட சாஹிலின் தந்தை வீரேந்தர் உட்பட 5 பேரை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags :