ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை.

by Staff / 22-03-2023 12:31:04pm
ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இருளப்பபுரம் அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது35). இவர் புத்தளம் மெயின் ரோட்டில் ஓட்டல் (புரோட்டா கடை) நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு ராதாகிருஷ்ணன் ஓட்டலில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், முத்துசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, ​​அங்கிருந்த டைரியில் ராதாகிருஷ்ணன் எழுதிய ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் 'என்னுடைய சாவுக்கு வக்கீல்கள் ரமேஷ், பிரபு மற்றும் பாலாஜி, பறக்கை கண்ணன், பாஸ்கர் ஆகியோர் காரணம்' என எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் ராதாகிருஷ்ணனின் தாயார் நாடாச்சி தங்கம் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- எனக்கு 5 மகள்களும், ராதாகிருஷ்ணன் என்ற ஒரு மகனும் உண்டு. எனது மகள்களை திருமணம் செய்து கொடுத்ததில் கடன் இருந்தது. இதனால், ராதாகிருஷ்ணன் இருளப்பபுரத்தில் உள்ள குடும்ப சொத்துக்களை கடனை அடைக்க முயற்சி செய்தார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து பெரியவர்கள் மூலமாக பேச்சுவார்த்தை நடத்திய இடம், எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பங்குத்தொகை கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு எனது மகனை தொந்தரவு செய்தார்கள். இதனால் மனமுடைந்து ராதாகிருஷ்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த புகாரின் அடிப்படையிலும், ராதாகிருஷ்ணன் எழுதியதாக கூறப்படும் கடிதத்தின் அடிப்படையிலும் வக்கீல்கள் ரமேஷ், பிரபு மற்றும் பாலாஜி, பறக்கை கண்ணன், பாஸ்கர் ஆகிய 5 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் வக்கீல் ரமேஷ் பா. ஜனதா ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories