ஆட்டோவில் கடத்திய 2 கிலோ தங்கம் பறிமுதல்

by Staff / 03-04-2023 03:38:46pm
ஆட்டோவில் கடத்திய 2 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே, வடக்கு கடற்கரை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாரிமுனையில் இருந்து மண்ணடியை நோக்கி வந்த ஒரு ஆட்டோவை வழக்கம்போல மடக்கி, சோதனை செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்டோவில் இருந்த வாலிபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த ஒரு பார்சலுடன் கீழே இறங்கி தப்பி ஓடினார்.
தன்னை போலீசார் துரத்தி வருவதை பார்த்து அந்த பார்சலை கீழேபோட்டு,   கடற்கரை ரயில் நிலையத்திற்குள் சென்று மின்சார ரயிலில் ஏறி தப்பினார். அந்த வாலிபர் வீசிச் சென்ற பார்சலை போலீசார்  எடுத்துப் பார்த்தபோது, அதில் 2 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து துறைமுக உதவி ஆணையர் வீரக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பிராட்வே பகுதியில் நின்றிருந்த ஆட்டோவில் மண்ணடிக்குச் செல்ல அந்த வாலிபர் சவாரிக்கு வந்துள்ளார் என்பது தெரிந்தது.
ஆட்டோ டிரைவரிடம் விசாரணை செய்ததில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தனியார் பஸ்ஸில் அந்த வாலிபர் வந்ததாகவும், மண்ணடிக்குச் செல்ல வேண்டும் என்று அவர் ஆட்டோவில் ஏறி வந்ததாகவும், வேறு எந்த விவரமும் தனக்கு தெரியாது என்றும் ஆட்டோ டிரைவர் கூறினார். அந்த வாலிபர் விட்டுச்சென்ற பார்சலில் 2 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தன. தப்பி ஓடிய அந்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பாரிமுனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via