விமான நிலையம் வந்த மோடியை வரவேற்காமல் புறக்கணித்த முதலமைச்சர்..

by Staff / 08-04-2023 03:53:08pm
விமான நிலையம் வந்த மோடியை வரவேற்காமல் புறக்கணித்த முதலமைச்சர்..

தலைநகர் ஐதராபாத்திற்கு விமானம் மூலம் வருகை தந்த பிரதமர் மோடியை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் ஆகியோர் வரவேற்றனர்.அங்கிருந்து செகந்திராபாத் ரயில் நிலையம் சென்ற பிரதமர் மோடி, செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து, பிரதமர் ஐதராபாத் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கு ஐதராபாத் பிபி நகர் எய்ம்ஸ் மருத்துவமனை, 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், செகந்திராபாத் ரயில் நிலைய மறுமேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.இந்நிலையில், தெலங்கானா வருகை தந்த பிரதமரை வரவேற்காமல் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மீண்டும் புறக்கணித்துள்ளார். தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. ஆளும் அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இன்னும் ஓராண்டுக்குள் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அதேபோல், டெல்லி மதுபான ஊழல் விவகாரத்தில் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா அமலக்கத்துறையின் தீவிர விசாரணை வளையத்தில் உள்ளார்.

 

Tags :

Share via