சென்னை சிறையில் கைதிகளுக்கு வீடியோ கால் வசதி அறிமுகம்

by Staff / 15-04-2023 01:26:15pm
சென்னை சிறையில் கைதிகளுக்கு வீடியோ கால் வசதி அறிமுகம்

சென்னை புழல் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு வீடியோ அழைப்பு வசதி, சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் கைதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை மாதத்தில் 10 முறை தொடர்பு கொள்ளலாம்.தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சிறைவாசிகளுக்கு வீடியோ அழைப்பு (வீடியோ கால்) வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று, சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி கடந்த 10ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி, புழல் பெண்கள் தனிச் சிறையில், தமிழ்ப்புத்தாண்டையொட்டி நேற்று(ஏப். 14) சிறைவாசிகளுக்கான வீடியோ அழைப்பு சோதனை முறையில் தொடங்கப்பட்டது.சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் தலைமை இயக்குனர் டிஜிபி அம்ரேஷ் பூஜாரி இதனை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறைத்துறை தலைமையிட டி. ஐ. ஜி கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கைதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இந்த வீடியோ அழைப்பு வசதி மூலம் ஒரு மாதத்தில் 10 முறை தொடர்பு கொள்ளலாம் என்றும், ஒவ்வொரு அழைப்பிலும் 12 நிமிடங்கள் வரை பேச முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு சிறைவாசி மாதத்திற்கு மொத்தம் 120 நிமிடங்கள் வரை பேச அனுமதிக்கப்படுவார்.புழல் மத்திய சிறையில் உள்ள பெண் கைதிகள் பிரிவில், ஒரு மாதத்திற்கு சோதனை முறையில் இந்த வசதி நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அதன் பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் இந்த வசதி தொடங்கப்படும் என்றும் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி கூறியுள்ளார்.நீண்ட தூரத்தில் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் அவர்களை நேரடியாக சிறைக்கு வந்து சந்திக்க முடியாதவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இந்த வசதிகள் சிறைவாசிகளுக்கு சிறந்த குடும்ப இணைப்பை வழங்குவதோடு, மன அழுத்தத்தைக் குறைக்கும் என்றும், சிறைவாசிகளின் மனதில் இத்திட்டம் சீர்திருத்தத்தைக் கொண்டு வர உதவும் என்றும் அம்ரேஷ் பூஜாரி குறிப்பிட்டார்.

 

Tags :

Share via