டாஸ்மாக் கடைகளில் 11% கடைகளை மூட அரசு நடவடிக்கை அமைச்சர் பேட்டி

by Staff / 15-04-2023 01:51:14pm
டாஸ்மாக் கடைகளில் 11% கடைகளை மூட அரசு நடவடிக்கை அமைச்சர் பேட்டி

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சிகளுக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில், பெரிய ஆண்டாங்கோவில் உள்ளிட்ட 43 இடங்களில் சாலைகள் அமைத்தல், கழிவு நீர் சாக்கடை அமைத்தல், குடிநீர் தொட்டி, ஆழ்துளை மற்றும் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். 10 கோடியே 55 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை அந்தந்த இடங்களுக்கு நேரில் சென்று தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,
500 டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என்ற அறிவிப்பின் வாயிலாக பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே 96 கடைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிட்டதட்ட 600 கடைகள் மூடப்படும். இது மொத்தமுள்ள கடைகளில் 11% ஆகும். புதிதாக டாஸ்மாக் கடைகளை திறப்பது இல்லை. இடமாற்றம் செய்யப்படும் கடைகளை புதிய கடைகள் திறப்பதாக தவறாக புரிந்து கொள்கின்றனர்.கோடைகாலத்தில் மின் தடை ஏற்படாத வண்ணம் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மின் துறை சார்பாக புகார்கள் ஏதும் இருப்பின் மின்னகம் சேவை மைய எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவித்தால் உடனடியாக சரி செய்யப்படும். 3 மாதத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் பெற்றால் 1312 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கும், முன்னேற்பாடாக டெண்டர் போடப்பட்டதால் தனியாரிடமிருந்து பெறும் போது விலை குறைவாக கிடைக்கிறது.காற்றாழை மின்சாரம் இன்னும் ஒரு சில வாரங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடை காலத்தில் சீராக மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மின்சாரம் கைவசம் கூடுதலாகவே கையிருப்பில் இருக்கிறது என்றார்.

 

Tags :

Share via