ஆயுதங்களுடன் வந்த பிரபல ரவுடி கைது
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஓட்டல் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதை பார்த்ததும் போலீசார் அருகில் சென்றனர். பின்னர் காரில் இருந்த 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கோவையில் இருந்து சென்னைக்கு காவலாளி வேலைக்கு செல்வதாக உள்ளது. மேலும் காரில் போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது காருக்குள் 2 வீச்சரிவாள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே காரில் வந்த 5 பேரும் அங்கிருந்து நைசாக தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, உதவி கமிஷனர்கள் ஆனந்தி, அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதையடுத்து வீச்சரிவாள்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை பிடிக்க தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இதனிடையே அரியானூர் பகுதியில் நடந்த வாகன சோதனையின் போது தப்பி ஓடியவர்களிடம் போலீசாரிடம் சிக்கினார். போலீஸ் விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் மேல தாழையூத்து பகுதியை சேர்ந்த ரவுடி வேல்குமார் என்ற கொக்கிகுமார் (வயது 28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.கைதான பிரபல ரவுடியான வேல்குமார் மீது 3 கொலை உள்ளிட்ட 22 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளன. மேலும் அவர் வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவானதால் கோர்ட்டு மூலம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வேல்குமாரை நெல்லை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் காரில் ஆயுதங்களுடன் வந்த போது சேலம் போலீசாரிடம் அவர் சிக்கி உள்ளார்.மேலும் அவருடன் வந்தது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி, சுடலைமுத்து, முத்து, மாரியப்பன் ஆகியோர் தெரியவந்தது. அவர்களை தொடர்ந்து தேடி வருகிறோம். மேலும் வேல்குமார் கைது செய்யப்பட்ட தகவல் குறித்து நெல்லை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் சேலம் வந்து வேல்குமாரை கைது செய்து அழைத்து சென்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதற்கிடையில் வேலுகுமாருடன் வந்த அவரது கூட்டாளிகளான சுந்தரபாண்டி, சுடலைமுத்து, முத்து, மாரியப்பன் ஆகியோரை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படையினர் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் வேல்முருகன் உள்ளிட்ட 5 பேர் யாரையாவது கொலை செய்வதற்காக கூலிப்படையாக வந்துள்ளார்களா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அருகே காரில் ஆயுதங்களுடன் வந்த பிரபல ரவுடி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :