தொடர் ஜோதி ஓட்டம் - சென்னையில் பழனிசாமி தொடங்கி வைத்தார்

by Staff / 15-08-2023 04:08:10pm
தொடர் ஜோதி ஓட்டம் - சென்னையில் பழனிசாமி தொடங்கி வைத்தார்

மதுரையில் நடைபெறும் எழுச்சி மாநாட்டுக்கான தொடர் ஜோதி ஓட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார். அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு, அதற்கு தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், எழுச்சி மாநாடு மதுரையில் வரும் ஆக. 20-ம் தேதி நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை அதிமுக தலைமை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த மாநாட்டுக்கான தொடர் ஜோதி ஓட்டத்தை நேற்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து மாவட்ட செயலாளர் அசோக் தலைமையில் 500 பேர் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர். ஜோதி தீபத்தை ஏற்றி, மாவட்ட செயலாளர் அசோக்கிடம் பழனிசாமி வழங்கினார். இந்த ஓட்டம், அடையாறு, பள்ளிக்கரணை, செங்கல்பட்டு வழியாக மதுரை நோக்கி செல்கிறது. இந்த ஜோதி, மாநாடு நடைபெறும் நாளில் மதுரையை சென்றடையும். ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்த பிறகு, பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி. பொன்னையன், டி. ஜெயக்குமார் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள் சத்யா, ராஜேஷ் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியதாவது: நீட்தேர்வு விஷயத்தில் குரோம்பேட்டை மாணவன், அவரது தந்தை மரணம் வேதனையளிக்கிறது. திமுக ஆட்சிக்கு முதல் கையெழுத்து நீட்தேர்வு ரத்து என்பதாக இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. அதற்கான சூட்சுமத்தையும் தெரிவிக்கவில்லை. மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரிடம் உள்ளது. இதற்கு திமுக அழுத்தம் தந்திருக்க வேண்டும். திமுக கூட்டணி எம். பி. க்கள் பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ சந்தித்து இதுகுறித்து பேசியதுண்டா? நாடாளுமன்றத்திலும் அவர்கள் குரல் கொடுக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு சட்டப்பேரவையில் நடைபெற்றது குறித்து திருநாவுக்கரசர், தான் இருந்த கட்சிக்கு துரோகம் செய்யும் வகையில் பேசியுள்ளார். அவர் அந்த சம்பவத்துக்குப்பின் அளித்த பேட்டிகள் அடுத்த நாள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via