நெருங்கும் பாராளுமன்றத் தேர்தல் புதிய ரயில்களை எதிர்பார்த்து காத்திருக்கும் தென்காசி மாவட்ட மக்கள்

by Editor / 22-08-2023 10:45:02pm
நெருங்கும் பாராளுமன்றத் தேர்தல் புதிய ரயில்களை எதிர்பார்த்து காத்திருக்கும் தென்காசி மாவட்ட மக்கள்

 

 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் புதிய ரயில்களை தென்காசி மாவட்ட மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதால் ஆளும் மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 தென்காசி ரயில் நிலையமானது நெல்லை - தென்காசி, விருதுநகர் - தென்காசி - கொல்லம்  வழித்தடங்களின் மிக முக்கியமான சந்திப்பு ஆகும். இதில் கொல்லம் -  தென்காசி -  அம்பாசமுத்திரம் -  நெல்லை வழித்தடமானது 1904 ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை அமைக்கப்பட்டு கொல்லத்தில் இருந்து சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் 2012 ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு தற்போது ரயில்கள் இயங்கி வருகின்றன. 

 தென்காசி -  இராஜபாளையம் -  விருதுநகர் வழித்தடமானது 1927 ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை  அமைக்கப்பட்டு பின்னர் 2004 ல் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு , பொதிகை சிலம்பு, கொல்லம் மெயில்  உள்ளிட்ட  ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் தென்காசி மாவட்ட பொதுமக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது.


 செங்கோட்டை -  தென்காசி இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைத்தல், தென்காசி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை பராமரிக்கும் வசதிகளை ஏற்படுத்தி டெர்மினல் ரயில் நிலையமாக மாற்றுதல்,  நெல்லையிலிருந்து அம்பை, ராஜபாளையம் வழியாக செல்லும் ரயில்களுக்கு என்ஜின் மாற்றாமலேயே பைபாஸில் செல்லும் வகையில் தென்காசி இரயில் நிலையத்தில் பைபாஸ் லைன் அமைத்தல், பாவூர்சத்திரம், கடையம், அம்பை, சேரன்மகாதேவி ரயில் நிலைய நடைமேடைகளின் நீளத்தை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டித்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு கோரிக்கைகள் பிரதானமாக உள்ளது.


 ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லையிலிருந்து அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக மாற்றுதல், பிலாஸ்பூர் ரயிலின் காலிப்பெட்டிகளைக் கொண்டு நெல்லையிலிருந்து வியாழக்கிழமை தோறும் தென்காசி வழியாக சென்னைக்கு நிரந்தர ரயில் இயக்குதல், பாவூர்சத்திரம் வழியாக செல்லும் செங்கோட்டை -  தாம்பரம் வாரம் மும்முறை ரயிலின் வேகத்தை அதிகரித்து தினசரி ரயிலாக இயக்குதல், நெல்லையிலிருந்து பாவூர்சத்திரம், தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்குதல், நெல்லையிலிருந்து பாவூர்சத்திரம் தென்காசி கொல்லம் வழியாக கர்நாடக மாநிலம் மங்களூருக்கு ரயில் இயக்குதல்,  குருவாயூரில் இருந்து புனலூர் வரை இயங்கும் ரயிலை தென்காசி ராஜபாளையம் வழியாக மதுரைக்கு நீட்டிப்பு, எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், தென்காசி, ராஜபாளையம் வழியாக வேளாங்கண்ணிக்கு வாரமிருமுறை ரயில், பாலருவி விரைவு ரயில்  நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு நீட்டிப்பு, மதுரையோடு நிற்கும் புதுடெல்லி - மதுரை சம்பர்க்கிராந்தி ரயிலை ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம் வழியாக நெல்லைக்கு நீட்டித்தல், ஈரோடு - நெல்லை ரயிலை பாவூர்சத்திரம் வழியாக செங்கோட்டைக்கு நீட்டித்தல், நெல்லை -  கொல்லம் இடையே நேரடி ரயில்கள் இயக்குதல் உள்ளிட்டவை தென்காசி மாவட்ட மக்களின்  பிரதான கோரிக்கைகளாக உள்ளது.

மின்மயமாக்கல்:
 விருதுநகர்-  செங்கோட்டை - கொல்லம், தென்காசி -  திருநெல்வேலி ஆகிய வழித்தடங்களில் ரயில்வே மின்மயமாக்கல் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் கூடுதல் ரயில்களை இயக்குவதற்கு சாதகமாக அமையும். 

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள்  கூறுகையில், ரயில்வே வாரியத்தின்  ஒப்புதலுக்காக காத்திருக்கும் அனைத்து ரயில்களையும் விரைவில் ஒப்புதல் அளித்து இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 தட்சிணகாசி என்று அழைக்கப்படும் தென்காசிக்கு சென்னை தவிர வேறு ஊர்களுக்கு ரயில்களே இல்லாத நிலைதான் நிலவுகிறது. எனவே மத்தியில் ஆளும் பாஜக அரசு தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் பெங்களூரு, கோவை மற்றும் வட மாநிலங்களுக்கு தென்காசி வழியாக ரயில்களை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

 

Tags : தென்காசி மாவட்ட மக்கள்

Share via