புதிய நீர் நிலைகளை உருவாக்க ஸ்டாலின் அறிவுறுத்தல்

by Editor / 24-07-2021 03:32:53pm
புதிய நீர் நிலைகளை உருவாக்க ஸ்டாலின் அறிவுறுத்தல்

 


நீர் ஆதாரங்களை அதிகரிக்க புதிய நீர் நிலைகளை உருவாக்கிடவும், மழை காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்த அணைகள் இல்லா மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்கள் அமைத்திடவும், நீர்வளத்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம், புதியதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை புனரமைத்து, தூர்வாரி, நீரின் கொள்ளளவை அதிகப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்வதோடு, புதிய நீர்நிலைகளை உருவாக்கிடவும், மழைநீர் மூலம் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்த, அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை குறிப்பாக தடுப்பணைகளை உருவாக்கிட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.


மாநில நிதி பணிகளான காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தூர்வாரும் பணிகள், அத்திக்கடவு - அவினாசி நீர்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கும் திட்டம், மேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டம், காட்டூர், -தத்தமஞ்சு ஏரிகளின் கொள்ளளவினை மேம்படுத்தி நீர்தேக்கம் அமைக்கும் திட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி ஏரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொளவாய் ஏரிகளை மீட்டெடுக்கும் திட்டம் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், நபார்டு நிதியுதவியுடன் புதிய தடுப்பணைகள் கட்டுதல், அணைக்கட்டுகள் மற்றும் நீர்நிலைகளை புனரமைப்பு செய்தல், செப்பனிடுதல், புனரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டத்தின் கீழ், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.


மேலும், நீர்வள ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில் புதிய தடுப்பு அணைகள் மற்றும் புதிய நீர்நிலைகளை உருவாக்கிடவும், விவசாயிகளின் நலன்கருதி பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருக்கும் நீர்நிலைகளைச் செப்பனிடவும், கால்வாய்களை சரி செய்யவும் முன்னுரிமை வழங்கி பணிகளை விரைந்து மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தினார்

 

Tags :

Share via