"தகைசால் தமிழர் விருது" வழங்க முதல்வர் உத்தரவு

by Editor / 27-07-2021 04:15:32pm



தமிழின வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியோருக்கு, தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுடன் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த, ‘தகைசால் தமிழர்’ என்ற புதிய விருதை உருவாக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாகத் தமிழக அரசு  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ''தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் மகத்தான, "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.


மேற்படி விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டு, தமிழக முதல்வர் தலைமையில், தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கவும் ஆணையிட்டுள்ளார்.


ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் ''தகைசால் தமிழர்" விருது பெறும் விருதாளருக்குப் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திர தின விழாவின்போது, முதல்வர் கையால் வழங்கப்படும்'' என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Tags :

Share via