அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு –  16 லட்சம் பேர்  பயன்பெறுவார்கள்.

by Editor / 25-10-2023 11:39:47pm
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு –  16 லட்சம் பேர்  பயன்பெறுவார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள  அரசு அலுவலர்கள்,  ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படியுடன் 4சதவிகிதம் சேர்த்து மொத்தமாக 46 சதவிகிதம் கடந்த ஜூலை 1 முதல் உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில்,  அரசோடு இணைந்து பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.  முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும்,  அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன்  செயல்பட்டு வருகின்றது.

அந்த வகையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள்,  ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.  இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2546.16 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.  எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.’ என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 

Tags : அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு –  16 லட்சம் பேர்  பயன்பெறுவார்கள்.

Share via