பெகாஸஸை ஒன்றிய அரசு வாங்கியதா? இல்லையா? -  ராகுல்

by Editor / 28-07-2021 06:06:28pm
பெகாஸஸை ஒன்றிய அரசு வாங்கியதா? இல்லையா? -  ராகுல்



இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ள பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருள் விவகாரம் தொடர்பாக ஏன் நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்கக்கூடாது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வியெழுப்பியுள்ளார்.பெகாஸஸ் மென்பொருள் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.இதன் காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்த பணிகளும் நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம், காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூனா கார்கே தலைமையில் நடந்தது.இதில் ராகுல், திமுக எம்.பி., திருச்சி சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில்," நாடாளுமன்றத்தை இயங்க அனுமதிக்கவில்லை எனக்கூறி எதிர்க்கட்சிகளை பிரதமர் அவமதிக்கிறார்.நாங்கள், குடிமக்கள், விவசாயிகள், நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரங்களை தான் எழுப்புகிறோம்" என்றார்.

கூட்டம் முடிந்த பின்னர் ராகுல் காந்தி கூறுகையில், ‛பணவீக்கம், பெகாசஸ் மற்றும் விவசாயிகள் பிரச்னைகளில் நாங்கள் சமரசம் செய்ய விரும்பவில்லை.இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். ஒட்டுக் கேட்பதற்காக பெகாசஸ் ஸ்பைவேரை இந்திய அரசு வாங்கியதா? இல்லையா என்ற ஒரே ஒரு கேள்வியை தான் நாங்கள் கேட்கிறோம். அதற்கு மத்திய அரசு பதில் சொல்லியாக வேண்டும்.பெகாசஸ் என்னும் ஆயதத்தை சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக ஒன்றிய அரசு பயன்படுத்தியுள்ளதா? பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறாது என ஒன்றிய அரசு தெளிவாகக் கூறியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி உங்கள் தொலைபேசியில் ஒரு ஆயுதத்தை அனுப்பியுள்ளார். இந்த ஆயுதம் எனக்கு எதிராக மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றம், பல தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஏன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் விவாதிக்க கூடாது? நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை நாங்கள் தொந்தரவு செய்கிறோம் எனக் கூறுகின்றனர்.நாங்கள் சபையைத் தொந்தரவு செய்யவில்லை, எங்கள் கடமைகளை நிறைவேற்ற விரும்புகிறோம்.இந்த ஆயுதம் (பெகாசஸ்) பயங்கரவாதிகள் மற்றும் தேச விரோதிகளுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும்.ஆனால், இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நரேந்திர மோடியும், அமித் ஷாவும் இந்தியாவின் ஜனநாயகத்தின் ஆன்மாவைத் தாக்கியுள்ளனர்.பெகாசஸ் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி விரிவான விளக்கம் தேவை" என்றார்.எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அனைவரும் வளாகத்தில் கொட்டும் மழையில் நனைந்தவாறு செய்தியாளர்களைச் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via