அண்ணாமலை பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

by Staff / 08-11-2023 01:41:15pm
அண்ணாமலை பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

தமிழ் வளர்த்த இத்தாலிய பேரறிஞர் வீரமாமுனிவரின் பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் இன்று (நவ. 8) மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், அமைச்சர்கள் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், சாமிநாதன், மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொன்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பாக உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒருசேர வாழும் நாடு இந்த நாடு. இதில் பெரியார் கொள்கைகளோடு, இந்து மதத்தையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில்தான், இந்த அரசு நடந்து கொண்டு இருக்கிறது. இந்துக்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சியாக திமுக இருப்பதால், ஆன்மிகவாதிகளை ஏற்றுக்கொண்டு அரவணைக்கும் இயக்கமாக திமுக இருப்பதால், பாஜகவால் தமிழகத்தில் எதுவும் செய்ய முடியாமல் இருப்பதால்தான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்து என்றெல்லாம் அறைகூவல் விடுத்து வருகின்றனர்" என்று அவர் கூறினார்.

 

Tags :

Share via