தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்கிறார்.

by Editor / 07-12-2023 09:52:20am
தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்கிறார்.


தெலங்கானாவின் 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தெலங்கானாவில் பெரும்பான்மைக்கு தேவை 61 இடங்கள்.

இந்நிலையில்,தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான சிபிஐ 1 இடத்தில் வென்றது. ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சி 39 இடங்களில்தான் வென்றது. இதனால் ஆட்சியை காங்கிரஸிடம் பிஆர்எஸ் கட்சி பறிகொடுத்தது.

இதனைத் தொடர்ந்து தெலங்கானா முதல்வராக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி தேர்வாகக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தெலங்கானா காங்கிரஸின் மூத்த தலைவர்களான பட்டி விக்ரமார்க்க மல்லு, உத்தம் குமார் ரெட்டி ஆகியோரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் குதித்தனர். இதனால் தெலங்கானா அரசியலில் குழப்பம் ஏற்பட்டது.

இதனையடுத்து தெலங்கானா முதலமைச்சர் யார் என்கிற விவகாரம் டெல்லிக்குப் போனது. தெலங்கானா காங்கிரஸ் விவகாரங்களுக்கான சிறப்பு பொறுப்பாளர் டிகே சிவகுமார் டெல்லி விரைந்து சென்று யாருக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு? யாரை முதல்வராக தேர்வு செய்வது? என்பது தொடர்பாக மேலிடத்துடன் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருடன் டிகே சிவகுமார் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டியை காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  இதனைத் தொடர்ந்து தெலங்கான மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்க உள்ளார். ஐதராபாத்தில் உள்ள எல்.பி. விளையாட்டு அரங்கில் இன்று மதியம் 1 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

 

Tags : தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்கிறார்.

Share via