மனைவியின் கள்ளக்காதலன் குத்தி கொலை
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரது மகன் ஜெய்கணேஷ் (34). இவர் கோவை துடியலூர் அருகில் உள்ள சுப்பிரமணியம்பாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். ஜெய் கணேஷ் நேற்று காலை 6 மணி அளவில் கே. என். ஜி. புதுார் பிரிவு பகுதியில் நடந்து சென்றார்.அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர் திடீரென தான் மறைத்து வைத்த கத்தியை எடுத்து ஜெய்கணேசை சரமாரியாக குத்தினார். இந்த சம்பவத்தில் ஜெய்கணேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ஜெய்கணேஷ் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், கோவை பன்னிமடையை சேர்ந்த லாரி டிரைவர் சாமிநாதன் (எ) சாமியாடி (42) என்பவரின் மனைவிக்கும், இறந்த ஜெய்கணேஷ் இடையே கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த சாமிநாதன், ஜெய்கணேசை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து துடியலூர் போலீசார் தலைமறைவாக உள்ள சாமிநாதன் என்கிற சாமியாடியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Tags :