முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 19இல் தமிழகம், புதுச்சேரியில் காலை 7 முதல் மாலை 6 மணி வரையும், மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் காலை 7 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஒருசில தொகுதிகளில் வாக்குப்பதிவு 3 மணியுடன் நிறைவடையும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக தேர்தல் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.
முதல்கட்ட வாக்குப்பதிவு
முதல்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இரண்டாம் கட்டம்
மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த நாளில், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
மூன்றாம் கட்டம்
நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
நான்காம் கட்டம்
நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே 13ஆம் தேதி 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளில் நடைபெறுகிறது.
ஐந்தாம் கட்டம்
ஐந்தாம் கட்ட தேர்தல் மே 20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஒடிசா, மஹாராஷ்டிரா, ஜம்மு – காஷ்மீர், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
ஆறாம் கட்டம்
6-ம் கட்ட தேர்தல் மே 25-ஆம் தேதி நடைபெறும் நிலையில், அன்று மொத்தம் 57 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குறிப்பாக ஹரியானா, டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிஷா, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் ஆறாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏழாம் கட்டம்
ஏழாம் கட்ட தேர்தல் மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு ஜூன் 01-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஹிமாச்சல பிரதேசம், சத்திஸ்கர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஒடிஷா உள்ளிட்ட 8 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதனை அடுத்து ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படவிருக்கிறது.
Tags : வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.