"மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்  ஆர்வம் குறைந்துள்ளது"-ராதாகிருஷ்ணன்

by Editor / 20-08-2021 04:29:41pm



தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் வருகை அதிகரித்துள்ளன, மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் குறைந்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு நிலையத்தில் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " 6.93 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வர உள்ளது. இதுவரை 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. பல நாட்களுக்குப் பிறகு நேற்று கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனை செய்ததில் ஒரு சதவிகிதம் நபர்களுக்கு மட்டுமே தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோவை, சேலம், தஞ்சாவூர் போன்ற 17 மாவட்டங்களில் 1% சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது அதிகளவு தடுப்பூசிகள் இருப்பதால் பொதுமக்கள் முன்வந்து தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசிகள் வருகை அதிகரித்துள்ளன, மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை. நேரடியாக மத்திய அரசு தொகுப்பிலிருந்தான் தடுப்பூசிகளைப் பெறுகிறோம். தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் தடுப்பூசிகளின் பேட் நம்பரைப் பதிவு செய்து கண்காணிக்கிறோம். மகாராஷ்டிரா, கொல்கத்தா போன்ற பகுதிகளில்தான் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது., 
"சென்னை மாநகராட்சியில் விடுபட்ட முதியவர்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்த இருக்கிறோம். இரண்டாம் தவணை தடுப்பூசியில் 10 லட்சம் பேர் கோவிஷீல்டு மற்றும் 3.5 லட்சம் பேர் கோவாக்சின் செலுத்திக்கொள்ளாமல் இருக்கிறார்கள்." என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், புனேவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 58 பெட்டிகளில் 6,93,970 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டது. மத்திய தொகுப்பிற்காக 27 பெட்டிகளில் 3,24,000 தடுப்பூசிகள் பெரிய மேட்டில் உள்ள மத்திய சுகாதார கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டது.

 

Tags :

Share via