நெல்லை: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை

by Editor / 23-09-2021 05:41:05pm
நெல்லை: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு  பரிசீலனை

நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை தொடங்கியது. வேட்பாளர்கள் முன்னிலையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  நிறைவு பெற்றது. நெல்லையில் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட 9 உள்ளாட்சி ஒன்றியங்களில் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள், மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 2069 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில், நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 6871 பேர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 


இதையொட்டி ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களிலும் வேட்பாளர்கள் தங்கள் மனுக்கள் மீதான பரிசீலனையில் நேரில் பங்கேற்றுள்ளனர். வேட்பாளர்கள் முன்னிலையில் வேட்பு மனுவில் கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையானவையா ஆவணங்களின் அடிப்படையில் விவரங்கள் சரியாக குறிப்பிட்டுள்ளனரா என்பது குறித்து அலுவலர்கள் ஆய்வு செய்து வருக்கின்றனர். குறிப்பாக பெயர் விவரங்களை துல்லியமாக கண்காணிக்கப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் மற்றும் முகவரி விவரங்களும், அடையாள அட்டையில் உள்ள பெயர் மற்றும் முகவரி விவரங்களும் ஒத்துப்போகிறதா என அலுவலர்கள் ஆய்வு செய்கின்றனர். 


அனைத்து விவரங்களும் சரியாக இருப்பின் தங்களது வேட்பு மனு ஏற்கப்பட்டு விட்டதாக வேட்பாளர்களிடம் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வேட்பு மனுவை வாபஸ் பெற வரும் வெள்ளி  கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். வேட்பாளர்களின் வேட்பு மனு விவரத்தை அறிந்து கொள்ள அவர்களின் ஆதரவாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் படையெடுத்து வருகின்றனர். இதனால் தொடர்ந்து நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

 

Tags :

Share via