பவானிபூர் இடைத் தேர்தல்: மம்தா பானர்ஜி வெற்றி

by Editor / 03-10-2021 05:05:53pm
பவானிபூர் இடைத் தேர்தல்: மம்தா பானர்ஜி வெற்றி

மேற்கு வங்கம் பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி 58 ஆயிரத்து 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்து வருகிறது.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடந்த மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும், அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்பதால், மம்தா போட்டியிட வசதியாக அவரது சொந்த தொகுதியான பவானிபூரில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தார். அதையடுத்து, பவானிபூர் மற்றும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 3 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்றில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலையில் இருந்தார்

அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட பிரியங்கா டிப்ரோவோலைவிட 58 ஆயிரத்து 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதனால், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்து வருகிறது.

 

Tags :

Share via