காலாண்டு, அரையாண்டு தேர்வு  இந்த ஆண்டு நடத்தப்படாது அமைச்சர் அன்பில் மகேஷ்

by Editor / 12-10-2021 05:06:48pm
காலாண்டு, அரையாண்டு தேர்வு  இந்த ஆண்டு நடத்தப்படாது அமைச்சர் அன்பில் மகேஷ்

நவம்பர் 1ம் தேதி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்தும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகள் குறித்தும், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், திட்டமிட்டபடி நவம்பர் 1ம் தேதி 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.


காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்தாண்டு நடத்துவதற்கான வாய்ப்பில்லை என்று கூறிய அவர், டிசம்பர் மாதத்தில் ஒருங்கிணைந்த முறையில் ஒரே ஒரு தேர்வை மட்டும் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் நீண்ட நேரம் மாஸ்க் அணிந்து வகுப்புகளில் தொடர்சியாக அமர்வது என்பது கடினமான ஒரு சூழ்நிலையாக இருக்கும் என்பதால், பெற்றோர்கள் விரும்பினால் ஒரு மணி நேரத்தில் கூட பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்லலாம் என்று தெரிவித்தார்.


மேலும், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு நடைபெறும் என்று கூறினார்.

 

Tags :

Share via