அரசின் திட்டங்கள், பயன்களை மக்கள் தெரிந்து கொள்ள3 வலைதளங்கள்

by Editor / 13-10-2021 03:51:52pm
அரசின் திட்டங்கள், பயன்களை மக்கள் தெரிந்து கொள்ள3 வலைதளங்கள்


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13 ந் தேதி) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கான www.cra.tn.gov.in என்ற வருவாய் நிருவாக ஆணையரக இணையதளம், https://www.cra.tn.gov.in/tnscs என்ற துணை ஆட்சியர்களுக்கான வலைதளம் மற்றும் https://www.cra.tn.gov.in/vaotransfer என்ற கிராம நிருவாக அலுவலர்களுக்கான மாவட்ட மாறுதல் வலைதளம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.வருவாய்த்துறையானது மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக உள்ளதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அரசின் பல்வேறு சமூக பொருளாதார திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான பட்டா, சிட்டா, அடங்கல், சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, வருமானச்சான்று போன்ற பல்வேறு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர்துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.அந்தவகையில், வருவாய் நிருவாக ஆணையரகத்திற்கான பிரத்தியேக இணையதளம்மாநில அரசால் அறிவிக்கப்படும் வருவாய் துறையின் சமூக பாதுகாப்பு திட்டங்கள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டங்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன்படும் சான்றிதழ்கள் வழங்கும் திட்டங்கள் போன்ற திட்டங்கள் வருவாய் நிருவாக ஆணையரகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

மக்கள் தெரிந்து கொள்ள...

இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் பயன்களை மக்கள் எளிதில் தெரிந்து கொண்டு பயனடைவதற்கு ஏதுவாக, வருவாய் நிருவாக ஆணையரகத்தால், www.cra.tn.gov.in என்ற பிரத்தியேக வருவாய் நிருவாக ஆணையரக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில், இவ்வலுவலகம் சம்பந்தப்பட்ட அரசு திட்டங்களின் விவரங்கள் மற்றும் அரசாணைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் பயன்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.தமிழ்நாடு அரசின் குடிமைப்பணியின் கீழ் பணிபுரியும் அலுவலர்களின் நிருவாக தேவைகளைப் பூர்த்தி செய்ய துணை ஆட்சியர்களுக்கான https://www.cra.tn.gov.in/tnscs என்ற பிரத்தியேக வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசு விதிகள் மற்றும் சட்டங்கள், அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் அரசாணைகள், வழிகாட்டு நெறிமுறைகள், சுற்றறிக்கைகள், பணிமாறுதல் மற்றும் பணிநியமனங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள இயலும்.

மாவட்ட மாறுதல் வலைதளம்

கிராம நிருவாக அலுவலர்களுக்கான கோட்ட, வட்ட அளவிலான பொது மாறுதல்கள் ஆண்டுதோறும் வருவாய் கோட்டாட்சியர் அளவிலும், மாவட்ட அளவிலான மாறுதல்கள் நிருவாக நலன் கருதி, மாவட்ட ஆட்சியர் அளவிலும், மாவட்டங்களுக்கு இடையேயான ஒருவழி மாறுதல்கள் மற்றும் மனமொத்த இருவழி மாறுதல்கள் வருவாய் நிருவாக ஆணையராலும் வழங்கப்பட்டு வருகின்றன.

இம்மாறுதல்கள் தொடர்பான கோரிக்கைகளைப் பரீசிலித்து, மாறுதல்களை தாமதமின்றியும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்தும் வகையில் வருவாய் நிருவாக ஆணையரகத்தால், https://www.cra.tn.gov.in/vaotransfer என்ற கிராம நிருவாக அலுவலர்களுக்கான பணி மாறுதல் வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பணி மாறுதல்களை தாமதமின்றியும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்த இயலும்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்தர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், இணை ஆணையர் (வருவாய் நிருவாகம்) இரா.சீத்தாலட்சுமி, தேசிய தகவலியல் மையத்தின் மாநில தகவலியல் அலுவலர் சீனிவாச ராகவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Tags :

Share via