இல்லம் தேடி கல்வி திட்டம்.. தன்னார்வலர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை

by Editor / 19-10-2021 10:24:39am
இல்லம் தேடி கல்வி திட்டம்.. தன்னார்வலர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை

சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற "இல்லம் தேடிக் கல்வி" பயிற்சிப் பணிமனை, விழிப்புணர்வு கலைப் பயணம் மற்றும் தன்னார்வலர்களுக்கான, இணையதளம் தொடக்க விழாவினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் ஆர்வமுள்ள தன்னார்வலர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், "இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் தன்னார்வலர்களை இணைப்பதற்கான இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஆர்வமாகப் பலர் பதிவு செய்ய முன் வர வேண்டும். இந்த திட்டத்தை நாம் அனைவரும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மாலை 5 மணி முதல் 7 மணி வரை கல்வி மையங்களுக்கு அனுப்ப வேண்டும்.20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்கிற வீதம் இந்த திட்டமானது நடைமுறையில் இருக்கும். தொடர்ந்து 6 மாத காலத்திற்கு இந்த திட்டம் செயல்படும். திருச்சி, தஞ்சை ,நாகை ,கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த இணைய தளம் வழி கற்றல் வகுப்புகளை எல்லாம் அந்த அந்த பள்ளி நிர்வாகமே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கற்றல் இடைவெளியை இந்த திட்டம் குறைக்கும். ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் மாதம் ரூபாய் 1000 ஊக்கத் தொகை வழங்க ஆலோசித்து வருகிறோம்.இத்திட்டத்தில் கதை சொல்வது, பாடல் பாடுவது போன்ற செயல்பாடுகளும் இடம் பெறும். பள்ளிக் கல்வித்துறை சார்பில் வகுப்புகள் வாரியாக கையேடு தயார் செய்து, தன்னார்வலர்களுக்கு கொடுக்கப்படும். அதன் அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்படும். 5ஆம் மாணவர்கள் வரை கற்பிக்கத் தன்னார்வலர்கள் 12ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் போதும். இதற்குத் தன்னார்வலர்கள் இணையதளத்தில் (https://illamthedikalvi.tnschools.gov.in/)பதிவு செய்ய வேண்டும்" என்றார்.

 

Tags :

Share via