10 வயது பெண் குழந்தை தீவைத்து எரிப்பு தந்தை வெறிச்செயல்

by Editor / 18-11-2021 04:52:44pm
10 வயது பெண் குழந்தை தீவைத்து எரிப்பு தந்தை வெறிச்செயல்

பணகுடி காவல்கிணற்றில் 10 வயது பெண் குழந்தையை தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த வெறிச்செயலில் அவரது தந்தையே ஈடுபட்டுள்ளார். 

நெல்லை மாவட்டம் பணகுடி காவல்கிணறு பாரதி நகரில் வசித்து வருபவர் அந்தோணிராஜ். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில் இரண்டாவதாக சுஜா என்பவரை திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவர் மூலம் மகேஸ்வரி (10) உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது குழந்தைகள் மூவரும் சுஜா மற்றும் அந்தோணிராஜுடன் வசித்து வருகின்றனர். காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அந்தோணி ராஜ் மற்றும் சுஜா வேலை பார்த்து வருகின்றனர். அவர்களது குழந்தை அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று மகேஸ்வரி காவல்கிணற்றில்  உள்ள பிரபல பேக்கரி கடையில் திருடியதாக அந்தோணிராஜுடம் கடையில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தோணிராஜ் வீட்டிற்கு சென்று மகேஸ்வரி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து உள்ளார். இதனால் அலறித் துடித்த மகேஸ்வரி தன்னை காப்பாற்றும்படி தந்தை அந்தோணிராஜை கட்டி பிடித்துள்ளார். இதனிடையே சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மகேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் அந்தோணிராஜுக்கும் காயம் ஏற்பட்டது. அவரும்  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மகேஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10 வயது சிறுமியை தந்தை எரித்து கொல்ல முயன்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via