வடமாநில இளைஞர்களால் தமிழக இளைஞர்களுக்கு வேலை இல்லை எனக்கூறி ஆத்திரத்தில் நான்கு வாலிபர்கள் செய்த வேலை.
திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் கிராமத்தில் வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுமார் 20 வடமாநில இளைஞர்கள் மர சம்பந்தப்பட்ட பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு வாரத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களை திருவள்ளூர் பகுதியில் வந்து வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தற்பொழுது ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சனிக்கிழமையான நேற்று மளிகை பொருட்களை வாங்குவதற்காக அமித்குமார் உள்ளிட்ட வடமாநில இளைஞர்கள் திருவள்ளூர் மார்க்கெட் பகுதிக்கு சென்றனர். அங்கு மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தபோது திருவள்ளூர் பகுதியை சேர்ந்த சிலர், வடமாநில இளைஞர்களை பார்த்து உங்களால் தமிழக மக்களுக்கு வேலை கிடைக்கவில்லை எனவும், வடமாநில இளைஞர்கள் இங்கு யாரும் வரக்கூடாது எனவும் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் வடமாநில இளைஞர் அமித்குமாரை வெட்டியுள்ளனர். இதனால் தற்காப்பிற்காக கத்தியை கையால் தடுக்க முயன்ற அமித்குமாரின் இடது உள்ளங்கையில் பலமாக வெட்டு விழுந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் பலத்த காயமடைந்த இளைஞரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்பு அவருக்கு உள்ளங்கையில் 13 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் தலைமறைவாக இருந்த திருவள்ளூர் எடப்பாளையம் விஜய் (வயது 19), தலகாஞ்சேரி கிராமம் வேலு (19), திருவள்ளூர் பெருமாள் செட்டி தெரு மஜித்( 28,) திருவள்ளூர் முகமதலி தெரு நிர்மல் (32)ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :