நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மாலை வெளியீடு

by Editor / 06-02-2022 06:12:49pm
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மாலை வெளியீடு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பரிசீலனை நேற்று முடிந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மாலை வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் 12 ஆயிரத்து 838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவுற்றது.

மொத்தம் 74,416 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. வேட்புமனு பரிசீலனை அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஒரு சில சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டன. நாளை மாலை 3 மணி வரை மனுக்களை திரும்ப பெறலாம்.

வேட்புமனுக்களை மனுக்களை திரும்ப பெறுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆகிய அனைத்து நிகழ்வுகளும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து நாளை மாலை 5 மணியளவில் வேட்பாளர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 19 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 22ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தொடர்ந்து உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.

 

Tags : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மாலை வெளியீடு

Share via