காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பால் கல்லூரி மாணவி தற்கொலை

by Staff / 26-03-2022 01:52:59pm
 காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பால் கல்லூரி மாணவி தற்கொலை

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கே.வி.பள்ளி, கர்னமிட்டா பகுதியை சேர்ந்தவர் கோவிந்தய்யா. இவரது மனைவி சரஸ்வதி. இத்தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர்.
 
கணவன்-மனைவி இருவரும் குவைத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களது 2-வது மகள் விஷ்ணுபிரியா (வயது 16). இவர் திருப்பதியில் உள்ள பத்மாவதி கல்லூரி விடுதியில் தங்கி இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் விஷ்ணுபிரியா வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. விஷ்ணு பிரியாவின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. ஆத்திரம் அடைந்த விஷ்ணு பிரியாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த விஷ்ணுபிரியா நேற்று மாலை விடுதியில் உள்ள அறையில் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் இதுகுறித்து விடுதி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் திருப்பதி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஷ்ணு பிரியாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணுபிரியா காதல் விவகாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via