தடுப்பூசிக்கு கட்டுப்படாத சி.1.2 வகை கொரோனோ வைரஸ் உலகின் 9 நாடுகளில் பரவியுள்ளது- மா.சுப்பிரமணியன்
தடுப்பூசிக்கு கட்டுப்படாத புதிய வகை வைரஸ் உலகின் சில நாடுகளில் பரவி வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மடுவான்கரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றோர்கள், முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தடுப்பூசிக்கு கட்டுப்படாத சி.1.2 வகை கொரோனோ வைரஸ் உலகின் 9 நாடுகளில் பரவியுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், “தற்போது குழந்தைகள் மீதான பாதிப்பு 6 முதல் 10 சதவீதமாக உயர்ந்தாலும் குழந்தைகள் உயிரிழப்பு தமிழகத்தில் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குழந்தைகள் மீதான நோய் பரவலை கட்டுப்படுத்திட தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு நோய் தடுப்பு பணிகள் தீவிரபடுத்தபட்டுள்ளது என தெரிவித்த அவர், தற்போது கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியபட்ட நிலையில் தமிழக கேரள எல்லையோர 9 மாவட்ட கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Tags : Unvaccinated C.1.2 type of corona virus has spread in 9 countries of the world - M.Subramanian