பெண் போலீசிடம் அத்துமீறிய போதைஆசாமி கைது.

by Staff / 25-10-2022 01:04:36pm
பெண் போலீசிடம் அத்துமீறிய போதைஆசாமி கைது.

நாகர்கோவிலில் தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் உத்தரவின் பேரில் நாகர்கோவில் நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கடை வீதிகளில் போலீசார் மப்டி உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அண்ணா பஸ் நிலையத்திலும் வடசேரி பஸ் நிலையத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கோட்டார் பெண் போலீஸ் ஒருவர் அண்ணா பஸ் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒருவர் குடிபோதையில் அந்த பகுதியில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். உடனே பெண் போலீஸ் அங்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அந்த நபர் தென்காசி பகுதியைச் சேர்ந்த ஜான்சன் (வயது 50) என்பது தெரிய வந்தது. பெண் போலீஸ் அவரை எச்சரித்த போது குடிபோதையில் இருந்த ஜான்சன் பெண் போலீசின் கையைப் பிடித்து ரகளையில் ஈடுபட்டார். அப்போது பெண் போலீசின் கையில் கிடந்த தங்க வளையல் உடைந்தது. இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் ஜான்சனை பிடித்து கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து பெண் போலீஸ் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். ஜான்சன் மீது அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவில் வழக்கு பதிவு செய்து ஜான்சனை கைது செய்தனர்.

 

Tags :

Share via