பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் உத்தரவு

by Staff / 29-10-2022 04:52:28pm
பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த துளசிமணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'நான் எனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறேன். விவாகரத்து வழக்கு கன்னியாகுமரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக எனது 2 பிள்ளைகளை பராமரித்து வருகிறேன். பிளஸ் 2 முடித்த என் மகன் சிவவிக்னேஷ் முருகேசனுக்கு(18), மால்டோவா நாட்டில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது.

சிறுவயதில் எடுத்த பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டதால், புதுப்பித்து தரக்கோரி விண்ணப்பித்தோம். எங்களது விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதால் நீதிமன்ற உத்தரவு அல்லது இருவரின் கையொப்பமின்றி பாஸ்போர்ட் வழங்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்து தர மறுத்துவிட்டனர். இதனால், என் மகனின் எதிர்காலம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக பாஸ்போர்ட்டை புதுப்பித்து தருமாறு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பவானிசுப்பராயன், மைனர் மகனின் எதிர்காலத்தை கவனிக்க வேண்டிய பொறுப்பால் அம்மா நீதிமன்றத்தை நாடியுள்ளார். கணவன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மகனை தோளில் சுமக்கும் நிலையில் மனைவி உள்ளார். கடந்த 15ஆம் தேதியே மால்டோவாவில் வகுப்புகள் தொடங்கி விட்டன. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாஸ்போர்ட் அலுவலரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் மகன் மருத்துவ படிப்பிற்காக மால்டோவா நாட்டிற்கு செல்ல ஒரு வாரத்திற்குள் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 

Tags :

Share via