விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு

by Staff / 08-12-2022 02:05:59pm
விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 57). இவர் நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.நேற்று இரவு பணியில் இருந்த அவர், 10 மணி அளவில் அருகில் உள்ள பெரிய மணலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரங்கராஜ், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதனை பார்த்த அந்த பகுதியினர், எலச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். அவரது உடல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள், ரங்கராஜன் உடலை பார்த்து கதறி அழுதனர்‌. இறந்து போன போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கராஜூக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.

 

Tags :

Share via