நள்ளிரவில் காட்டுப்பகுதியில் கார் டிக்கியில் வைத்து ஒருவர் எரித்து கொலை
நள்ளிரவில் காட்டுப்பகுதியில் கார் டிக்கியில் வைத்து ஒருவர் எரித்து கொலை. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தீவிர விசாரணை...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சூரன்குடி கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞானபுரம் காட்டுப் பகுதியில் TN 64 F 1584 பதிவு எண் கொண்ட மாருதி ஷிப்ட் கார் ஒன்று நள்ளிரவு நேரத்தில் எரிந்து கொண்டு இருப்பதை கண்டு அவ்வழியாக சென்ற உப்பள தொழிலாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க சென்ற போது அங்கு காரின் டிக்கியில் ஆண் சடலம் ஒன்று எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்த போலீசார் சம்பவ இடத்துக்கு தடவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர்.
முற்றிலும் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி தடயவியல் நிபுணர்கள் அப்பகுதியில் வைத்தே பரிசோதனைகள் நடத்தினர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
காரின் பதிவெண்ணை கொண்டுபோலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்.... ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த சின்னசாமி மகன் நாகஜோதி (48) என்பவருக்கு சொந்தமான ஷிப்ட் கார் என்பதும், நாகஜோதி கடத்தி வரப்பட்டு கார் டிக்கியில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
இது தொடர்பாக சூரன்குடி காவல் நிலைய போலீசார் நாகஜோதியின் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுப் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் காரில் ஒருவர் எரித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்
விளாத்திகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :