மேலப்பாளையத்தில் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை-தாளாளர் கைது.

by Editor / 05-02-2023 07:58:46am
 மேலப்பாளையத்தில் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை-தாளாளர் கைது.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பெரும்பாலும் இஸ்லாமிய மாணவிகளே கல்வி பயின்று வரும் நிலையில் இந்த பள்ளியில் தாளாளராக குதுபுன் நஜீப் என்பவர் பணியாற்றி வந்தார்.

இவர் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது. அந்த மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி மாணவிகள் பள்ளி வளாகத்தில் திடீரென உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மாணவிகளின் பெற்றோர் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் திரண்டு மாணவிகளுக்கு ஆதரவாக பள்ளியை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் பாளையங்கோட்டை வட்டாட்சியர் ஆனந்த பிரகாஷ் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து மாணவியர்களிடமும்  மற்றும் போராட்டம் நடத்திய பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் கைது செய்யப்பட வேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்வோம் என பெற்றோர் மற்றும் மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக மகாராஜா நகரில் உள்ள பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து தலைமையிடத்து துணை ஆணையர் அனிதா தீவிர விசாரணை நடத்தி நெல்லை மேலப்பாளையம் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் குதுப்தீன் நஜீப்பை போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேலும் இந்த வழக்கில் பள்ளி முதல்வர் காதரம்மாள் தாளாளரின் மனைவி முகைதீன் பாத்திமா ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via