ஜேசிபி, டிராக்டரை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம்

by Staff / 31-08-2023 05:26:42pm
ஜேசிபி, டிராக்டரை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம்


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓலையம்புத்தூர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அய்யனார் கோயில் குளத்தில் ஏற்கனவே 15 அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அய்யனார் கோவில் குளத்தில் இன்று ஒரு நாள் மட்டும் மண் எடுப்பதற்கு வைத்தியநாதபுரத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் அரசு அனுமதி பெற்றுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓலையம்புத்தூர் கிராம மக்கள் மணல் எடுப்பதை தடுத்து நிறுத்தி ஜேசிபி மற்றும் டிராக்டரை சிறைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே 15 அடி ஆழத்திற்கு மண் எடுத்துவிட்ட நிலையில் மீண்டும் மண் எடுத்து பள்ளம் தோன்டினால் அங்கு தேங்கும் நீரில் நிறைய உயிரிழப்புகள் ஏற்படும் என தெரிவித்த கிராம மக்கள், அதிக அளவு பள்ளம் நோண்டுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது என தெரிவித்தனர். தங்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான நீர் ஆதாரத்தை பறிக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக கலைந்து செல்லாவிட்டால் அனைவரையும் கைது செய்ய நேரிடும் என காவல்துறையினர் மிரட்டல் தொணியில் பேசியதால் அவர்களிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் மணல் எடுப்பதை ரத்து செய்து உத்தரவிட்டார். பின்னர் சிறைபிடித்த டிராக்டர், ஜேசிபியை கிராம மக்கள் விடுவித்தனர்.

 

Tags :

Share via