பேரூராட்சி பணியிடங்களை ரத்து செய்து அரசு ஆணை: ராமதாஸ் கண்டனம்

by Staff / 04-03-2024 02:09:03pm
பேரூராட்சி பணியிடங்களை ரத்து செய்து அரசு ஆணை: ராமதாஸ் கண்டனம்

பேரூராட்சிகளில் 8, 130 பணியிடங்களை ரத்து செய்யும் ஆணையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மொத்தம் 490 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றில் எலக்ட்ரிஷியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுநர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர், தெருவிளக்கு பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 8, 130 பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 7, 061 பணிகள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், 1, 069 பணியிடங்கள் காலியாக உள்ளன.இதுவரை உள்ளாட்சி அமைப்புகளில் கவுரவமான ஊதியம் வழங்கப்பட்டு வந்த பணிகள், இனி தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு மிகக்குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்படும். அதன் காரணமாக கவுரவமான ஊதியத்துடன் கண்ணியமாக வேலை செய்யும் வாய்ப்பு தமிழக இளைஞர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இது சமூக அநீதி ஆகும்.தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பாமல் இருக்கும் பணியிடங்களை ஒழிக்கும் வேலையை தான் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. இது வளர்ச்சிக்கு வகை செய்யாது. இதை உணர்ந்து 8, 130 பணியிடங்களை ஒழிக்கும் ஆணையை அரசு திரும்ப பெற வேண்டும். காலியிடங்களை நிரப்புவதுடன் 2 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்கும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via