நெல்லை: வாளுடன் நடனமாடிய கார் டிரைவர்; கைது!
நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள திருமால் நகரின் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசித்து வருபவர், மணிகண்டன். இவர் கார் டிரைவராக பணிபுரிகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் ஒரு இறப்பு வீட்டுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றிருக்கிறார்.
இறப்பு வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்த மணிகண்டன், அதன் பின்னர் நண்பர்களோடு சேர்ந்து நடனமாடியிருக்கிறார். அப்போது அவர் கையில் வாளுடன் நடனம் ஆடியிருக்கிறார். அதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அச்சத்தில் ஓரமாக ஒதுங்கி நின்றிருக்கிறார்கள்.
கையில் வாளுடன் மணிகண்டன் நடனத்தில் ஈடுபட்டதை அவரது நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மணிகண்டனின் பிறந்தநாள் நிகழ்ச்சி தொடர்பாக மணிகண்டனின் நண்பர் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் மணிகண்டனை வாழ்த்திய அந்த நண்பர், ஏற்கெனவே எடுக்கப்பட்ட கையில் வாளுடனான வீடியோவை பதிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. அதைப் பார்த்த பாளையங்கோட்டை சைபர் கிரைம் போலீஸார், வீடியோ காட்சியில் இடம்பெற்றவர் யார் என்பது குறித்து விசாரித்து வந்தார்கள்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வைரலான வீடியோவில் கையில் வாளுடன் நடனம் ஆடியவர் டிரைவர் மணிகண்டன் என்பது தெரியவந்திருக்கிறது. அதனால் அவர் மீது கொலை மிரட்டல், பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவரைக் கைது செய்ததுடன் அவரிடம் இருந்த மூன்று அடி நீளமுள்ள வாளை பறிமுதல் செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags :