கர்ப்பிணிக்கு ரத்தம் வழங்கிய துணை போலீஸ் சூப்பிரண்டு- சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

by Admin / 26-08-2021 05:16:14pm
கர்ப்பிணிக்கு ரத்தம் வழங்கிய துணை போலீஸ் சூப்பிரண்டு- சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு ரத்தம் வழங்கிய துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி உஷா(வயது 22) எம்.காம் பட்டதாரி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவரை நேற்று காலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர்

. அங்கு அவரது உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் உஷாவின் உடலில் ரத்தம் குறைவாக இருப்பதாகவும், எனவே அவருக்கு ஏ பாசிட்டிவ் ரத்தம் தேவைப்படுவதாகவும் கூறினார்கள்.
 
ஆனால் அங்கு அந்த வகை ரத்தம் இல்லை. இதற்கிடையே ரத்த தேவை குறித்து சமூக வலைதளங்களிலும் தகவல் வைரலானது. இதை அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து சென்று ரத்ததானம் செய்தார்.

இதன் பிறகு உஷாவுக்கு பிரசவம் நடைபெற்றது. இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமிக்கு உஷாவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டும் குவிந்து வருகிறது.
 

 

Tags :

Share via