ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை பலி

by Editor / 19-09-2021 05:25:52pm
ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஆலக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சித்தப்பா ஹசாரே என்பவர் தனது குடும்பத்தினருடன் தோட்டத்து வீட்டில் வசித்தார். இவரது இரண்டரை வயது ஆண் குழந்தை சரத். நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பு நின்று விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் அக்கம்பக்கம் தேடியுள்ளனர். 


எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் உடனடியாக காவல்நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் குழந்தையை கால்துறையினரும் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் கைவிடப்பட்ட 15 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சரத் விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 24 மணி நேரமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தண்ணீர் மற்றும் உணவின்றி குழந்தை இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் இந்த ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு உள்ளது. 
கிணற்றில் தண்ணீர் வராத காரணத்தால் பயன்பாடின்றி இருந்துள்ளது. மேலும் கிணற்றையும் யாரும் மூடவில்லை. எனவே, ஆழ்துளை கிணறை தோண்டியது யார் என்று விசாரணை நடந்து வருகிறது. 

 

Tags :

Share via