எழுத்தாளர்  கு. அழகிரிசாமி -பிறந்தநாள் கட்டுரை

by Editor / 22-09-2021 05:30:51pm
எழுத்தாளர்  கு. அழகிரிசாமி -பிறந்தநாள் கட்டுரை

 

கு. அழகிரிசாமி (செப்டம்பர் 23, 1923 - சூலை 5, 1970) குறிப்பிடத்தக்க நெல்லை சீமை தமிழ் எழுத்தாளர். 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த அழகிரிசாமி, சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார்.


இவர் எழுத்தாளர் கி. ராஜநாராயணின் இளமைக் கால நண்பர். தமிழ் நேசன் (மலேசியா), சக்தி, சோவியத் நாடு, பிரசண்ட விகடன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். இலக்கிய உலகில் இவரது சிறுகதைகள் புகழ்பெற்றவை. 1970 இல், இவரது அன்பளிப்பு என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.அழகிரிசாமி தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் இடையில் இடைசெவல் என்னும் சிற்றூரில், குருசாமி-தாயம்மாள் ஆகியோருக்கு முதல் மகனாகப் பிறந்தார். பரம்பரையாக வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள் அழகிரிசாமியின் குடும்பத்தார். ஆனால், வெளியே பேசும்போது தமிழில்தான் பேசுவார் அழகிரிசாமி.


வசதியின்மை காரணமாக அவரை நான்காவது வரைகூட படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை. ஆனால், விடாமுயற்சியுடன் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து முடித்தார். அந்தச் சிற்றூரில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர் என்ற "பெருமை' அவருக்கு உண்டு. பள்ளிப் படிப்பைவிட அவர் அனுபவத்தில் பெற்ற அறிவே அதிகம்.


’உறக்கம் கொள்ளுமா?’ என்ற இவரது முதல் சிறுகதை 1943-ஆம் ஆண்டு "ஆனந்த போதினி' மாத இதழில் பிரசுரமானது.ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் எழுத்து அவரை மிகவும் கவர்ந்தது. கார்க்கியின் நூலை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர் இவர்தான். தமிழ் இலக்கியங்களுடன் மேல்நாட்டு இலக்கியங்களையும் படித்தார். பழைய பாடல்களுக்கு உரை எழுதும் ஆற்றலையும் வளர்த்துக்கொண்டார்.அரசுப் பணியில் சேரத் தேர்வு பெற்றதால், சார்பதிவாளர் அலுவலகத்தில் முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்தில் எழுத்தர் உத்தியோகம் கிடைத்தது. ஆனால், நாள்தோறும் பத்திரங்களைப் பதிவது அவருக்குப் பிடிக்கவில்லை. அந்த எழுத்தர் உத்தியோகத்தில் மனநிறைவு ஏற்படவில்லை. அதனால் சென்னைக்கு வந்து, முதல் கதையை வெளியிட்ட "ஆனந்த போதினி' பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்.


"ஆனந்த போதினி', "பிரசண்ட விகடன்' ஆசிரியராக இருந்த மூத்த எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் அழகிரிசாமியின் எழுத்தாற்றலைப் புரிந்து கொண்டு, அவருக்கு உதவி ஆசிரியர் பணியைத் தந்தார்.


"பிரசண்ட விகடனி'ல் வெளிவந்த அவரது கதைகளை சமகால எழுத்தாளர்களான வல்லிக்கண்ணனும், புதுமைப்பித்தனும், தொ.மு.சி.ரகுநாதனும் பாராட்டினார்கள். பிரசண்ட விகடன் பத்திரிகை அலுவலகத்தை விட்டுவிட்டு "தமிழ்மணி' என்ற அரசியல் வார இதழில் சேர்ந்தார்.


"தமிழ்மணி' வார இதழில் அவர் சில காலம்தான் பணியாற்றினார். அதன் பிறகு வை.கோவிந்தன் வெளியிட்ட "சக்தி' மாத இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அதன் ஆசிரியராக இருந்தவர் தி. ஜ. ரங்கநாதன். கு.அழகிரிசாமியின் முற்போக்குச் சிந்தனையையும், ஆற்றலையும் கண்டுகொண்ட வை.கோவிந்தன், அழகிரிசாமிக்கு சக்தி இதழிலும் பதிப்பகத்திலும் இடமளித்து, எழுதுவதற்கு வாய்ப்பளித்தார்.


அழகிரிசாமியின் முயற்சியால் வெளியான கம்பராமாயணம், காவடிச் சிந்து ஆகிய பதிப்புகள் அவருடைய ஆராய்ச்சித் திறனையும் மொழியாக்க ஆற்றலையும் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தின.புதுமைப்பித்தனைப் போலவே அழகிரிசாமியும் படைப்பாளிகளைப் படைக்கிற சிறுகதைப் படைப்புகளை வழங்கியவர். தலைமுறை இடைவெளித் தூரங்களையெல்லாம் கடந்து இன்றும் நம்முடன் அவரது சிறுகதைகள் உரையாடுகின்றன.

உணர்வுகளை அதிரச் செய்து நம்முள் மாற்றங்களை விளைவிக்கின்றன.அழகிரிசாமி படைப்புகளைத் தந்தவர் மட்டுமல்ல, படைப்பாளிகள் எழுவதற்கும் வளர்வதற்கும் பக்கபலமாகவும் பின்புலனாகவும் இருந்தவரும்கூட. கரிசல் இலக்கியத் தந்தை என்று கொண்டாடப்படுகிற கி.ராஜநாராயணன், இளந்தலைமுறை நவீனப் படைப்பாளிகளுடன் தொடர்பும் உறவும் வைத்திருந்த சுந்தர ராமசாமி போன்ற மிக முக்கிய ஆளுமைகள் கொடிவீசி வளர்வதிலும் முக்கிய ஆதர்சமாக விளங்கியவர். எழுது எழுது என்று எழுத வைத்தவர்.

எழுதப்பட்டதை பாராட்டி வாழ்த்தி உற்சாகப்படுத்தியவர்.ஆசிரியர், பத்திரிகையாளர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், கவிஞர், பாடலாசிரியர், மொழி பெயர்ப்பாளர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்ட அழகிரிசாமி 1970ஆம் ஆண்டு தனது 47ஆவது வயதில் மறைந்தார்.

 

Tags :

Share via