திருப்பத்தூரில் கொடூரம் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து எரித்த கணவன்
திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருக்கும், கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு வர்ஷினி என்கிற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவனை பிரிந்த திவ்யா, தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.
25ம் தேதிஅதிகாலை 4 மணி அளவில் மாமியார் வீட்டிற்கு சென்ற சத்தியமூர்த்தி, “கோயிலுக்கு போகலாம் வா” என்று மனைவியை அழைத்துள்ளார். கோயிலுக்கு தானே கூப்பிடுகிறார் என்று திவ்யாவும் அவருடன் சென்றுள்ளார். செல்லும் வழியில் திவ்யாவுக்கு பால் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்த பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததை அறியாத திவ்யா அதை குடித்துள்ளார்.
பால் குடித்ததும் மயங்கிய திவ்யாவை திருப்பத்தூர் எலவம்பட்டி பகுதியில் இருக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகே தூக்கி சென்றிருக்கிறார். அங்கே, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். மயக்கத்தில் இருந்தாலும், உடல் எரிந்தபோது அலறிக் கொண்டே அங்கும் இங்கும் ஓடியிருக்கிறார் திவ்யா. அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைத்து ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே, தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
இதற்கிடையில், மனைவி தீ பற்றி எரிந்ததும் தப்பி ஓடிய சத்தியமூர்த்தி, தனக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன. அதனால் இனி எங்களால் வாழ முடியாது. அதனால் மனைவியை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். என்னை தேடாதீர்கள். என் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று வாட்ஸ்அப் மூலமாக உறவினர்களுக்கு வீடியோ அனுப்பி விட்டு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :