பேரா.ஜெயராமனுக்கு கொலை மிரட்டல் -சீமான் கட்சியினருக்கு வைகோ, திருமா கடும் கண்டனம்

by Editor / 29-09-2021 09:30:49am
பேரா.ஜெயராமனுக்கு கொலை மிரட்டல் -சீமான் கட்சியினருக்கு வைகோ, திருமா கடும் கண்டனம்

மீத்தேன் உள்ளிட்ட நாசகார திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்திய பேராசிரியர் ஜெயராமனுக்கு நாம் தமிழர் கட்சியினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வைகோ, தொல் திருமாவளவன், இடதுசாரி தலைவர்கள் பாலகிருட்டிணன், முத்தரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் வெளியிட்ட கூட்டறிக்கை:

தமிழ்த்தேசத்தின் எதிரி யார்? என்ற தலைப்பில் 19 9 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் உரையாற்றியவர் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன் அவர்கள் ஆவார்கள். அந்த உரையில் தமிழ்த்தேசியம் என்ற பெயரால் திராவிட எதிர்ப்பு என்பதையும், பெரியார் எதிர்ப்பு என்பதையும் ஓங்கிப் பேசியவர்களில் முதன்மையானவர்களான தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ மணியரசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரது உரைகளுக்கு விடையளித்தும் மேலும் தேவையான விளக்கங்களளித்தும் உரையாற்றியிருந்தார்..வட இந்தியாவில் சங்கிகள் நடத்தையை அப்படியே மறு வார்ப்பாக இங்கு செய்து கொண்டிருப்பவர்கள்தாம் நாம் தமிழர் கட்சியினர் என்பதை அறிவோம். அவர்கள், பேராசிரியர் செயராமன் அவர்களையும் அவரது குடும்பத்தையும் மிக மிகக் கீழ்த்தரமானச் சொற்களால் சமூக வலைதளங்களில் பதிவிடுவதுமாக இருந்துள்ளனர். அதன் உச்சமாக நாம் தமிழர் கட்சியினர் எட்டு பேர்கள், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் மாணவர் இளைஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் மயிலாடுதுறையில் உள்ள செல்வராசன் கடைக்குச் சென்று 'ஆபாசமாக'த் திட்டியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். அதோடு நிற்காமல் மயிலாடுதுறையில் பேராசிரியர் வீட்டுக்குப்போய் 'என்ன செய்கிறோம் பார்! ' என்று மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர். அன்று வெளியூர் சென்றிருந்த பேராசிரியர் செயராமன் ஊர் திரும்பிக் கொண்டு இருந்திருக்கிறார்.

நடந்தவற்றைக் கேள்விப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களும் எஸ்டிபிஐ கட்சியினரும், நிகழ்வு நடந்த கடைக்குச் சென்று செய்திகளைக் கேட்டறிந்த பின்னர் காவல் நிலையத்தில், குற்றச்செயலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் மற்றும் உடன் வந்தவர்கள் பெயரினைக் குறிப்பிட்டே காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இதில் வியக்கத்தக்க மற்றொரு செய்தி என்னவென்றால் தங்கள் மீது புகார் அளித்ததைக் கேள்விப்பட்ட நாம் தமிழர் கட்சியினரும் காவல் நிலையம் சென்று பேராசிரியர் மீதும் மற்றவர்கள் மீதும் ஒரு புகார் அளித்துள்ளனர். குற்றச் செயலில் ஈடுபட்டதாகப் புகார் அளித்ததற்குப் பின்னால் காவல் நிலையத்திற்கு வந்திருந்த குற்றம் சாட்டப்பட்டவர்களை எந்த ஒரு விசாரணைக்கும் உட்படுத்தாமல் அவர்கள் அளித்த புகாரை வாங்கிப் பதிவு செய்து கொண்டுள்ளனர். இது காவல்துறையினரின் ஒரு சார்பு போக்கையே வெளிப்படுத்துகிறது.அரசு ஊழியர் ஒருவர் தனது சொந்த சார்பு நிலையை அரசுப்பணியில் உட்செலுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பெரும் குற்றமாகும். இதேபோன்றதொரு செயல்பாடு சேலம் மாவட்டம் மோரூர் என்ற ஊரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடியைப் பொது இடத்தில் எல்லா கட்சிக் கொடிகளும் உள்ள இடத்தில் நாட்டும்போதும் அதை எதிர்த்துச் சாதியப் போக்குடையோரால் சிக்கல் நடந்திருக்கிறது. காவல்துறை முன்னிலையிலேயே கற்கள், பாட்டில்களை வீசித் தாக்குதல் நடத்தியதைக் காவல்துறையினரே தங்கள் கண்களால் பார்த்த பின்னரும், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாருடன், கற்கள் பாட்டில்கள் வீசியவர்களிடமும் ஒரு புகாரினைப் பெற்று, கற்கள் வீசிய தரப்பில் 18 பேர்கள் மீதும், காயம்பட்டோர் தரப்பில் 27 பேர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து தளைப்படுத்தியிருக்கிறார்கள்; தேடிக் கொண்டிருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட வன்முறை போக்குகளையும் சாதியப் போக்குகளையும் கட்டுக்குள் கொண்டு வருவதற்குக் காவல் துறையினரின் கவனமற்ற, குற்றமிழைப்போருக்குச் சார்பான நடவடிக்கைகளைக் கண்டிக்கிறோம்..பேராசிரியர் செயராமன் அவர்கள் பணி நிறைவு பெற்ற பேராசிரியர் என்பதோடு, காவிரி கடைமடைப் பகுதிகளுக்காகத் தம் முழு உழைப்பையும் செலுத்தி வருபவர்..மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டு வருபவர்.. மக்களிடம் செல்வாக்கு மிக்கவர். அவரையே இப்படி மிரட்டவும் இழித்துப் பேசவும் செய்த நாம் தமிழர் கட்சியினரின் போக்கு வடநாட்டில் அடாவடித்தனமாய்ச் செயற்படும் ஆர் எஸ் எஸ் குண்டர்களின் தன்மையை ஒத்தது.. முற்றிலும் குடிநாயக முறைக்கு எதிரானது. எனவே இப்போக்குகள் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் நடைபெறக்கூடாத வகையில் அந்நிகழ்வை வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசினையும், காவல்துறை தலைமையினையும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via