தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

by Editor / 07-10-2021 10:34:02am
தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கர்நாடக மாநிலத்தில் உருவாகும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக கடலில் கலக்கிறது.தென்பெண்ணை ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கேஆர்பி அணை மற்றும் திருவண்ணாமலை சாத்தனூர் அணைகளில் நீர் நிரம்புகிறது. மேலும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தருமபுரி மாவட்டம் கே.ஈச்சம்பாடி அருகில் ஒரு சிறிய அணைகட்டு கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆண்டுதோறும் மூன்று முறை வெள்ளப்பெருக்கு ஏற்படும் தென்பெண்ணை ஆற்றில் கடந்த 3 மாதங்களாக மழையின்றி வறண்டு காணப்பட்டது.

தற்பொழுது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 707 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து கெலவரப்பள்ளி அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 707 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 768 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 54 அடி உயரத்தில் 51 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி, முதல் போக சாகுபடிக்கு வினாடிக்கு 177 கன அடி தண்ணீரும், வினாடிக்கு 591 கன அடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் என மொத்தம் வினாடிக்கு 768 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதில் 444 கனஅடி தண்ணீர் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாரூர் அரசம்பட்டி ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்கு செல்கிறது. தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 324 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஈச்சம்பாடி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 180 கன அடியிலிருந்து 324 கன அடி அதிகரித்துள்ளது.

இந்த தொடர்ந்து கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நிரம்பி, தண்ணீர் வழிந்தோடுவது பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து 1 மாதத்திற்கு மேலாக ஆற்றில் தண்ணீர் செல்வதால், நவலை, பெரமாண்டப்பட்டி, தொட்டம்பட்டி, எம்.வெளாம்பட்டி, கீழ்மொரப்பூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் பொதுமக்கள் இறங்கவே, கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டை வர கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via