139இல் திமுக வெற்றி. 1இல் மட்டும் அதிமுக

by Editor / 13-10-2021 10:19:28am
139இல் திமுக வெற்றி. 1இல் மட்டும் அதிமுக

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின.

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் பணியானது நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

வாக்கு எண்ணும் மையங்களில் 31 ஆயிரத்து 245 அலுவலர்கள் வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 1381 ஒன்றிய குழு உறுப்பினர், 2901 ஊராட்சி தலைவர், 22,581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என 27 ஆயிரத்து 003 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. 28 மாவட்டங்களில் விடுபட்ட 789 பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

9 மாவட்டங்களிலும் 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக கூட்டணி 139இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. காட்டாங்ககுளத்தூர் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த கஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.

 

Tags :

Share via