மண்டல பூஜைக்காக 15-ந்தேதி நடைதிறப்பு.

by Admin / 11-11-2021 04:29:12pm
மண்டல பூஜைக்காக 15-ந்தேதி நடைதிறப்பு.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் பம்பை பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 90 பணியாளர்கள் பணி மர்த்தப்பட்டுள்ளனர்.கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவில் உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து வருவதால் மண்டல பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக 15-ந்தேதி மாலை ஐய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. 16-ந்தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என தேவசம்போர்டு அறிவித்து இருந்தது. இப்போது வரை கோவிலுக்கு செல்ல முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவசம்போர்டு செய்துள்ளது.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள், பயணிக்கும் சாலை, அதற்கான வாகன வசதி பற்றிய தகவல்களையும் தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது.

அதன்படி சபரிமலை ஐய்யப்ப பக்தர்கள் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பம்பையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 340 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதில் சொகுசு மற்றும் விரைவு பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதில் குளிர்சாதன வசதி கொண்ட 100 பஸ்களும், குளிர்சாதனவசதி இல்லாத 80 பஸ்களும் அடங்கும். இந்த சிறப்பு பஸ் போக்குவரத்து பம்பையில் இருந்து நாளை (12-ந்தேதி) முதல் இயக்கப்பட உள்ளது.

இதுமட்டுமல்லாது ஆன்லைன் மூலம் பதிவு செய்தும் பஸ்களில் பயணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு குழுக்களாக வரும் பக்தர்கள் 40 பேர் வரை ஒன்றாக முன்பதிவு செய்து பயணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோல சபரிமலைக்கு வரும் பக்தர்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் பம்பை பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 90 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் 36 பேர் தொழில்நுட்ப பணியாளர்கள் ஆவர்.

 

Tags :

Share via