பாலக்காடு - போத்தனூர் பகுதியில் வன உயிர்களைக் காப்பாற்றும் வகையில் தெற்கு ரயில்வேயின் ஏற்பாடுகள்.

by Editor / 29-11-2021 08:16:57pm
பாலக்காடு - போத்தனூர் பகுதியில் வன உயிர்களைக் காப்பாற்றும் வகையில் தெற்கு ரயில்வேயின் ஏற்பாடுகள்.

பாலக்காடு கோட்டத்தின் வாளையார் மற்றும் எட்டிமடை இடையே 26-11-21 அன்று, சுமார் இரவு 09.00 மணிக்கு மூன்று யானைகள் ரயிலில்  மோதிய சோக சம்பவம் நிகழ்ந்துள்ளதுது.  ரயில் எண்: 12602, மங்களூர் சென்ட்ரல் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்  எக்ஸ்பிரஸ்  'ஏ' லைனில் ஓடிக்கொண்டிருந்த போது இவ்விபத்து நடந்துள்ளது.
 இச்சம்பவம் நடந்த இடத்தில், காட்டு யானைகள் அடிக்கடி குறுக்கிடுவதைக் கருத்தில் கொண்டு, மாலை 06.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரயில் இயக்கம் நிரந்தரமாக மணிக்கு 45 கி.மீ என்ற வேகக் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. ரயில் தண்டவாளத்தில் யானைகள் இறப்பதை தடுக்க ரயில்வே மற்றும் வனத் துறை மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்த மாண்புமிகு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) அமைத்த குழு, நிரந்தர ரயில் வேகக் கட்டுப்பாடான 45 கிமீ வேகத்தை பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இரவு நேரங்களில் ரயிலின் இயக்கம் மணிக்கு 45 கிமீ வேகமும், பகலில் மணிக்கு 65 கிமீ வேகமும் தொடர்கிறது.
 பாலக்காடு மற்றும் போதனூர் இடையேயான ரயில் பாதை 'ஏ' லைன் மற்றும் 'பி' லைன் எனப்படும் இரட்டை ஒற்றைப் பாதையாகும். சம்பவம் நடந்த அன்று சம்பந்தப்பட்ட ரயில் 'ஏ' லைனில் ஓடக்கூடாது என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஏ லைன் மற்றும் பி லைன் இரண்டையும் இரு திசையில் இருந்து இயக்கும் ரயில்களுக்குப் பயன்படுத்தலாம் என்பதால் அவ்வாறு கூறுவது தவறானது. போத்தனூர் பக்கம் 'ஏ' லைன் உயரமான பகுதியில் இருப்பதால் சரக்கு ரயிலை இயக்குவதில் சிரமம் உள்ளது. எனவே ஓடும் ரயில்களின் வகை மற்றும் அவற்றின் சுமை விவரங்களைக் கருத்தில் கொண்டு, எந்தப் பாதையில் ரயிலை இயக்க வேண்டும் என்று கோட்ட இயக்கக் கட்டுப்பாடு பிரிவு முடிவு எடுக்கிறது. இந்த செயல்பாட்டு நடைமுறைக்கு இணங்க, சம்பவத்தின் போது 'பி' பாதையில் ஒரு சரக்கு ரயில் இயக்கப்பட்டது, எனவே ரயில் எண்.12602 'ஏ' பாதையில் இயக்க வேண்டியிருந்தது. கடந்த காலங்களில் யானைகள் ரயிலில் மோதிய சம்பவங்கள் 'ஏ' லைனை விட 'பி' லைனிலேயே அதிகம் பதிவாகியிருந்தன என்பதும் நிலப்பரப்பு காரணங்களால் இது அதிகம் என்பதும் உண்மைதான்.
 தெற்கு ரயில்வேயின் பாலக்காடு கோட்டம், ரயில்-யானை மோதலை குறைக்கவும், தடுக்கவும் பல்வேறு முயற்சிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அவை:

· ரயில் தண்டவாளங்களைக் கடக்கும் யானைகளை லோகோ பைலட்டுகள் தெளிவாகப் பார்ப்பதற்கு வசதியாக ரயில் பாதைகளில் உள்ள மரக்கிளைகளைத் தொடர்ந்து அகற்றுதல்.

யானைகள் தண்டவாளத்தை கடக்காமல் தடுக்க 12V மின்னழுத்தத்துடன் தரை மட்டத்தில் சூரிய மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

· தமிழகத்தின் வாளையார் - எட்டிமடை பிரிவில், ரயில் தண்டவாளப் பகுதிக்கு அருகில் யானைகள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க உயரமான கரையோரப் பகுதியில் யானைச் சரிவுப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

· தண்டவாளத்தில் ரயில்களைக் கண்டதும் யானைகள் இரயில் பாதையிலிருந்து விலகிச் செல்வதற்குப் போதிய இடவசதியை வழங்குவதற்காக, யானை குறுக்கிடும் இடங்களில் தண்டவாளத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் அகலப்படுத்தப்பட்டுள்ளது.

லோகோ பைலட்டுகளுக்கு  ரயில் பாதை தெளிவாக தெரிவதற்காக யானை குறுக்கிடும் இடங்களில் சோலார் விளக்குகள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 மேற்கூறியவற்றைத் தவிர, கேரளா மற்றும் தமிழ்நாடு வனத் துறையினர் யானைகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், அவர்கள் தொடர்ந்து ரயில் தண்டவாளத்தில் ரோந்து மற்றும் தண்டவாளத்தின் அருகே யானைகளின் நடமாட்டம் குறித்த தகவல்களைத் தெரிவிக்கின்றனர்.

தென்னக ரயில்வேயின் இத்தகைய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புடன் கண்காணித்ததன் காரணமாக யானைகள் ரயிலுடன் மோதும் பல சம்பவங்கள் தடுக்கப்பட்டு யானைகளின் விலைமதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. 2020-21 ஆம் ஆண்டில் (செப். 1, 2021 வரை), தண்டவாளத்தின் அருகே 24 யானைகள் காணப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2020-21, 2019-20 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் முறையே
69, 61 மற்றும் 24  யானை காணப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ரயில் தண்டவாளத்தில் யானைகள் இறப்பதைக் கட்டுப்படுத்த ரயில்வே மற்றும் வனத்துறை எடுத்த நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்த மாண்புமிகு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) அமைத்த குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்த தெற்கு ரயில்வேயும் துரிதமாகச் செயல்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வருங்காலத்தில் யானைகள் ரயில்களில் அடிபடுவதைத் தடுக்க, மாநில வனத் துறைகளுடன் ஒருங்கிணைந்து அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்க தெற்கு ரயில்வே உறுதிபூண்டுள்ளது.


 

 

Tags :

Share via