பத்திரிகையாளர்களுக்கு கோவிட் சிகிச்சை தனி மையம் தேவை: சென்னை பிரஸ் கிளப் கோரிக்கை
பத்திரிக்கையாளர்களை கொரோனா ஆபத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று தலைமைச் செயலருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
1. கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவத்துறையினர், உள்ளாட்சிப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினரைப் போன்று இரவும் பகலுமாக களத்தில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினர் கொரோனா நோய்த்தொற்றுப் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில், காலம் தாழ்த்தாமல் உடனடியாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறந்த சிகிச்சை அளித்திட ஆவண செய்ய வேண்டுகிறோம். மேலும் பத்திரிகையாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு கோவிட் சிகிச்சை மையம் ஒன்றை உடனடியாக உருவாக்கித் தர வேண்டுகிறோம்.
2. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காலகட்டத்தில் மக்களிடையே விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டு கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகிய பத்திரிகையாளார்களின் குடும்பங்களுக்கு உடனடியாக தமிழக அரசு நிவாரணத் தொகையை – இழப்பீட்டுத் தொகையை வழங்கிட வேண்டுகிறோம்.
3. பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்கள் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைக்க வேண்டுகிறோம். சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்திடவும் வேண்டுகிறோம்
Tags :