முத்துகுமரனின் உடலைக் கொண்டு வர நடவடிக்கை

by Staff / 14-09-2022 02:35:52pm
முத்துகுமரனின் உடலைக் கொண்டு வர நடவடிக்கை

குவைத் நாட்டில் சுட்டுகொல்லப்பட்ட முத்துகுமரன் மரணம் தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன் அவரது உடல் கொண்டு வரப்படும் என அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன், குவைத் நாட்டிற்கு செப்டம்பர் 3ஆம் தேதி வேலைக்கு சென்றார். பாலைவனத்தில் தன்னை ஆடு, ஒட்டகம் மேய்க்க வைத்து விட்டதாகவும், மின் வசதி கூட இல்லாத இடத்தில் தங்கியுள்ளதாகவும் மனைவியிடம் தொலைபேசியில் கூறி அழுதுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு திரும்ப முயற்சி செய்த முத்துக்குமரன் செப்டம்பர் 7ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. ஜாக்கூர் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்துக்கொண்டு இருந்த முத்துக்குமரன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதை குவைத் விசாரணை குழுவினர் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

முத்துக்குமரன் உடலை தமிழ்நாடு கொண்டு வருவதற்கு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குவைத் நாட்டின் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் உடல் கொண்டுவரப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via