தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

by Editor / 14-02-2023 01:26:01pm
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பிரபல கட்டுமான நிறுவனமான ஆதித்யராஜ், அசோக் ரெசிடென்ஸி, ஆதித்யராம், அம்பாலால் ஆகிய 4 குழுமங்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் நாடு முழுவதும் சுமார் 60-இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அண்ணாநகர், மணலி,  காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம்  ஆகிய இடங்களிலும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
காலை 6 மணி முதலே சென்னையில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் சென்னையை பொறுத்தவரை அசோகா ரெசிடென்சி ஹோட்டல் உரிமையாளரின் அண்ணா நகர் வீடு மற்றும் போரூரில் அமைந்துள்ள அவரது ஹோட்டல் ஆகியவற்றில் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதே போல ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆதித்யராம் குழுமத்திற்கு  சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி தெலங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான காஞ்சிபுரம் , ஸ்ரீபெரும்புதூர் , விழுப்புரம் , மணலி உள்ளிட்ட 60- க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன. வரி ஏய்ப்பு புகார் வந்ததை தொடர்ந்து வருமானவரி துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை மாவட்டம் ஆத்தங்கரை பள்ளிவாசல் மற்றும் முக்கூடல் ஆகிய பகுதிகளில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான கல் குவாரிகளில் வருமான வரி சோதனை நடத்திவருகின்றனர்.மேலும்  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் நாட்டு மருந்து நிறுவனத்திற்கு சொந்தமான ஐந்து இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டுவருகின்றனர்.இதே போன்று நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள இலந்தைகுளம் என்ற கிராமத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் கிரஷர் மற்றும் கல்குவாரியில் வருமான வரி துறையினர் சோதனை நடந்துவருகிறது. இந்த சோதனைகளில்   500 -க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
 

 

Tags : தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

Share via